Felix vincent
வேடிக்கையாகச் சொல்லப்படும் கதை.
ஒரு கிராமத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, ஒரு தம்பதியருக்கு திருமண வெள்ளிவிழா நடைபெற்றது. திருமண வெள்ளிவிழா மேடையில் வெள்ளிவிழா கொண்டாடும் பெண்ணுக்கு அருகே இருந்த ஒரு வயதான பாட்டி அவளிடத்தில், ”ஊரில் இருக்கின்ற எல்லாரும் உங்களுடைய குடும்பத்தை உயர்வாகப் போற்றுகிறார்களே! இந்த இருபத்தைந்து ஆண்டுகால இல்லற வாழ்வில் உனக்கும் உன்னுடைய கணவருக்கும் இடையே சண்டையே வந்தில்லையா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், ” அது ஒரு பெரிய கதை” என்று தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
திருமணமான புதிதில் நாங்கள் இருவரும் தேனிலவுக்காக ஒரு மலைவாசஸ்தலத்திற்கு சென்றோம். அப்போது போக்குவரத்து வசதி எல்லாம் இன்று இருப்பது போல் கிடையாது. ஆதலால் எங்களுடைய துணிமணி மற்றும் பெட்டியை ஒரு கழுதையில் ஏற்றிவைத்து, பயணமானோம். நன்றாக மேலேறிக் கொண்டிருந்த கழுதை திடிரென்று சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்து சினமடைந்த என்னுடைய கணவர், வேகமாக கழுதையிடம் சென்று, அதன் ஒரு காதைத் திருகி “இது முதல் எச்சரிக்கை” என்றார். பின்னர் துணிமணி மற்றும் பெட்டியை அதன்மேல் ஏற்றி வைத்துவிட்டு, மீண்டுமாகப் பயணமானோம். நன்றாக மேலேறி வந்துகொண்டிருந்த கழுதை மீண்டுமாக இடறிக் கீழே விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவர் அதன் இன்னொரு காதைப் பிடித்துக்கொண்டு, “இது இரண்டாவது எச்சரிக்கை, இன்னொரு முறை கீழே விழுந்தால் அப்புறம் நடக்கிறது வேறு” என்று சொல்லி எச்சரித்துவிட்டுச் சென்றார்.
பின்னர் கழுதையின் மேல் துணிமணிகளை ஏற்றி வைத்து நாங்கள் இருவரும் மேலே பயணமானோம். நாங்கள் போகவேண்டிய இடத்திற்கு மிக அருகே வந்தபோது, மீண்டுமாக கழுதை சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவருக்கு கோபம் தலைக்கேறியது. எனவே, அவர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கழுதையை சுட்டு வீழ்த்தினார். கழுதை துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்துபோனது. இதைப் பார்த்து பதறிப்போன நான் அவரிடம், “எதற்காக அந்த வாயில்லாத ஜீவனை இப்படிச் சுட்டுக் கொன்றீர்கள்” என்று கேட்டடேன். அதற்கு அவர், என்னுடைய காதைத் திருகி, “இது முதல் எச்சரிக்கை” என்றார். அவ்வளவுதான் இனிமேலும் ஏதாவது பேசினால் கழுதைக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும் என உணர்ந்துகொண்டு, அன்று பேச்சை நிறுத்தியவள்தான் இன்று வரைக்கும் நான் அவரிடம் எதுவும் பேசியதில்லை” என்றாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த வயதான பாட்டி மயங்கி விழாதுதான் தாமதம்.